Monday, March 30, 2009

மக்களைக் கொடுமைப்படுத்துவது பொதுவில் நிறுத்தப்படவேண்டியதாகும்


அன்டனி விக்டர் சோ செ அடிகள்
மன்னார்

கலந்துரையாடியது –
தாரா சிறீராம்


தற்போது அரசின் யுத்த நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில், மன்னாரில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை எவ்வாறு பாதிப்படைந்துள்ளது?

தற்போதைய அரசின் இந்த யுத்த செயற்பாடு போக்குவரத்து உட்பட அனைத்து விடயங்களிலும் தாக்கஞ்செலுத்தியுள்ளது. கையடக்கத்தொலைபேசி மற்றும் தொடர்பாடல் சேவைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கட்டிடப்பொருட்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம்விட மிகமுக்கியமான விடயம் இங்குள்ள மக்கள் அனைவரும் மனரீதியில் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் இவர்களது உறவுகள் வன்னிப் பிரதேசத்திற்குள் முடக்கப்பட்டுள்ளன. அவர்களின் சுக துக்கங்களை அறியமுடியாமலுள்ளது. இந்த யுத்த நிலைமையினால் இங்கு வாழும் மக்கள் மிகவும் வேதனையுடன் வாழ்கின்றனர்.

இன்று மன்னார் மக்களின் வாழ்க்கை எவ்வாறுள்ளது?

சாதாரண வாழ்க்கையினைப் பற்றி விபரிப்பதாயின் மக்கள் அன்றாடம் வேலைக்குச் செல்கின்றனர், கோயிலுக்குச் செல்கின்றனர், தேவஸ்தானத்திற்குச் செல்கின்றனர். இவையெல்லாம் வெளிப்படையாகக் காணக்கூடியவையாக இருந்தாலும், மனரீதியில் இவர்கள் மிகவும் பயத்துடன்தான் வாழ்கின்றனர். எமக்கு ஏன் இப்படி நடக்கின்றது அல்லது நடக்கப்போகின்றது என்ன என்பதுதான் இவர்களின் பயமாக இருக்கின்றது. வன்னியில் இடம்பெறுபவை தொடர்பாக இவர்களால் எதுவும் அறியமுடியாதுள்ளது. இதனாலுங்கூட அவர்களின் மனதில் பயம் நிலவுகிறது.

மன்னாரிலுள்ள மக்களின் மனிதஉரிமை தொடர்பாகப் பேசினால்…

உதாரணமாக மன்னார், வவுனியா போன்ற பிரதேசங்களுடன் இந்த விடயத்தை நான் ஒப்பிடப்போவதில்லை. இருப்பினும், மன்னாரில் முன்னையதைவிட சற்று சுபமான நிலை மாறியுள்ளது. இது பிரச்சனை எதுவுமில்லை என்பதைக் குறிப்பிடவில்லை. காணாமற்போதல்கள் இடம்பெறுகின்றது. இது ஒரு பாரிய பிரச்சனை. கொலைச்சம்பவங்கள் ஆடிமாதத்திலிருந்து எமக்கு அறிக்கையிடப்படவில்லை. கைதுசெய்யும் நடவடிக்கைகள்கூட இடம்பெறுவதாகத் தெரியவில்லை. இதற்குப் பதிலாக கடத்தல்கள் இடம்பெறுகின்றது.

மன்னாரிலுள்ள கலிமுண்டாய் மற்றும் சிறுக்குண்டால் முகாம்களின் தற்போதைய நிலை எவ்வாறுள்ளது?

மனிதாபிமானத்துடன் பார்த்தால் இது மிகவும் வேதனைக்குரிய விடயம். இம்மக்கள் தாம் விரும்பிய இடத்தில் சென்றுவாழ இடமளிக்க வேண்டும். இருப்பினும் பாதுகாப்புத்தரப்பினரின் கருத்துப்படி இம்முகாம்களில் தேசியபாதுகாப்புக்கு பங்கம் விழைவிக்கக்கூடியவர்கள் இருக்கின்றனரென்பதாகும். இந்த அனுமானத்திற்கு எமது பதில் அவ்வாறாயின் அவர்களைத் தேர்ந்தெடுத்து நன்நடத்தை நிலையங்கள் போன்ற ஒருவழியினை அமைக்கும்படியாகும். பொதுவாக அனைவரையும் இவ்வாறு அடைத்தல் பிழையென்பது எமது கருத்தாகும். குறிப்பாக மருந்துதான் வாழ்க்கையென வாழ்பவர்களும் இங்குள்ளனர். கற்பிணித்தாய்மார்கள் உள்ளனர். வயதுவந்தவர்கள், பிள்ளைகள் என்போரும் இங்குள்ளனர். இவர்களுக்கும் சாதாரணமான நிம்மதியான ஒரு வாழ்க்கையினை கொண்டுநடாத்த ஒரு வாய்ப்பை வழங்கவேண்டும்.

மடு தேவாலயத்தின் நிகழ்கால நிலைமை தொடர்பில் குறிப்பிட்டால்….

மடு தேவாலயத்தை பலத்த பாதுகாப்பின்கீழ் அரசு செயற்படுத்துகின்றது. தேவாலயத்திற்குப் பொறுப்பான குரு உட்பட 11பேர் அங்கு தற்போதைக்குத் தங்கியுள்ளனர். இதற்குமேலாக இங்கு ஒருவர் வருவதாயின் அனுமதி பெறவேண்டியிருக்கும். இச்செயற்பாடு மிகவும் நீண்டகாலத்தை எடுக்கும். இரு ஒரு புனிதத்தலமாக இருந்தாலும் மக்கள் அங்கு வழிபாட்டுக்குச் செல்லமுடியாதுள்ளது. இதுவொரு பாரிய பிரச்சனையாக உள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக நாங்கள் இத்தியாகத்தை செய்கின்றோம்.

தமிழ் மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் இந்தக் கொடுமையினைப்பற்றி உங்களது கருத்து என்ன?

எமது நிலை, பிழைசெய்தவர்களிருந்தால் அவர்களை சட்டப்படி தண்டிப்பதாகும். இலங்கை ஒரு குடியரசு நாடெனின் குடியரசு நாட்டினுள் இவ்வாறு குற்றமிழைப்பவர்களை தண்டிக்க நீதிமன்றமுறையிருக்கும். இருப்பினும் பொதுவில் ஒரு சமூகத்தை மாத்திரம் கொடுமைப்படுத்துவதை எம்மால் ஏற்கமுடியாது. இதனூடாக இனங்களிடையே குரோதம் அதிகரிக்கின்றது. இதனால் பொதுவில் மேற்கொள்ளப்படும் இக்கொடுமைகளை நிறுத்த வேண்டும். இலங்கை குடியரசு நாடாயின் சிங்கள, தமிழ் எவ்வினத்தவராக இருப்பினும் கௌரவத்துடன் மனிதனாக வாழக்கூடியதாக இருக்கவேண்டும்.

தற்போதைய அரசு மனிதஉரிமையினைப் பாதுகாப்பதில்லை. இதனால் இதற்குச் சர்வதேச தலையீடு அவசியமா?

ஆம், இது முழுஉலகளவிலும் செய்யப்படும் ஒரு உதவியாகும். தலையீடல்ல. எமக்கு சர்வதேச உதவி அல்லது ஒத்துழைப்பு தேவைப்படுகின்றது. உலகில் ஒவ்வொரு பிரதேசத்திலும் மனிதஉரிமை நிலைமை வேறுபடுகின்றது. இன்று உலக நாடுகளை எடுத்துக்கொண்டோமானால் ஒருவரிலொருவர் தங்கியுள்ளது தெளிவாகின்றது. இது இலங்கையினையும் உள்ளடக்குகின்றது. இந்நிலை இலங்கையினால் உணரப்படவேண்டிய ஒரு உண்மையாகும். விஷேடமாக உலகளாவிய ரீதியில் மனிதஉரிமை அபிவிருத்தியடைந்துள்ளது. இதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேசக் கொள்கைகளும் இருக்கின்றது. இவற்றைக் கருத்திற்கொண்டு சர்வதேச ரீதியில் எமக்கு உதவ முன்வரவேண்டும்.

இந்த இனரீதியான பிரச்சனைக்கு அரசியல் தீர்வு அவசியமென்று நினைக்கின்றீர்களா?

கண்டிப்பாக அரசியல் தீர்வு அவசியம். என்னால் எவ்வகையான தீர்வென்று நிச்சயப்படுத்த முடியாது. எமக்குத் தெரிந்தவகையில் தமது நாட்டின் அரசியல் பிரச்சனையின்போது பல்வேறு முறைமூலம் தீர்வுகண்ட நாடுகள் பலவற்றை உலகில் காணக்கூடியதாக உள்ளது. இவற்றிலொன்றை நன்றாக ஆராய்ந்து எமது நாட்டிற்குப் பொருத்தமான ஒன்றை எம்மால் தெரிவுசெய்ய முடியும். இந்த நீண்டகால யுத்தத்திற்காக பல்வேறு தரப்பினரால் பல விடயங்களை தியாகஞ்செய்ய வேண்டியிருக்கின்றது. இதனால் எமக்கு அரசியல் தீர்வு அவசியம்.

No comments: